‘
போடா போடிÕ பட ஹீரோயின் வரலட்சுமி. அவர் கூறியதாவது: போடா போடி படத்தில் எனது நடிப்பை எல்லோரும் பாராட்டினார்கள். இவ்வளவுநாள் காத்திருந்து நடித்ததற்கு பொருத்தமான வேடம் என்றனர். எனது தந்தை சரத்குமாரும் என் நடிப்பை பாராட்டினார். சினிமாவில் எனது திறமையை மட்டுமே நம்பி இருக்கிறேன். என் அறிவு என்ன சொல்கிறதோ அதை மட்டும் செய்கிறேன்.
நடனம் எனக்கு பிடிக்கும். சிறுவயது முதல் எல்லாவகை நடனமும் கற்றிருக்கிறேன். மேனேஜ்மென்ட் படிப்பில் மாஸ்டர் டிகிரி முடித்திருக்கிறேன். நடிப்பை பொறுத்தவரை இந்தி நடிகர் அனுபம் கெர் நடிப்பு பள்ளியில் படித்தேன்.
‘எனக்கும் விஷாலுக்கும் என்ன உறவு? என்று கேட்கிறார்கள்.எங்கள் இருவர் குடும்பத்துக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் உண்டு. எனது தந்தை சரத்குமார், விஷால் தந்தை தயாரித்த படங்களில் நடித்தது முதல் இந்த நட்பு தொடர்கிறது. அப்போதே விஷாலை எனக்கு தெரியும். அவர் எனது நெருங்கிய நண்பர். என்னுடைய தொழில் முறையில் எனது வழிகாட்டி. எங்களுக்குள் இருக்கும் உறவு இதுதான். இதை மீறி வேறு எந்த உறவும் இல்லை.
‘மத கத ராஜா படத்தில் எனக்கு வாய்ப்பு பெற்றுத்தந்தது விஷாலா? என்கிறார்கள். ஹீரோயின் தேர்வு விஷயத்தில் அவர் தலையிடுவதில்லை. இயக்குனர் சுந்தர்.சிதான் என்னை தேர்வு செய்தார். திருமணம் பற்றி கேட்கிறார்கள். இப்போதுதான் நடிக்க வந்திருக்கிறேன். நிறைய சாதிக்க வேண்டி உள்ளது. இவ்வாறு வரலட்சுமி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக